இப்போதைய திருமணங்களில் மணமக்கள் தங்களின் வருகையை வித்தியாசமாக காட்டிக்கொள்ளப் பல புதிய வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் தீப்பொறிகளை உமிழும் துப்பாக்கிகளை ஏந்தியபடி மேடைக்கு வருகின்றனர். மேடையை நெருங்கும் போது இருவரும் உற்சாகமாகத் துப்பாக்கியால் சுட, அந்த இடமே ஒளியால் நிறைந்து மகிழ்ச்சியாகக் காணப்படுகிறது. ஆனால், அந்தத் தருணம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
துப்பாக்கியைக் கையாண்டபோது ஏற்பட்ட சிறிய கவனக்குறைவால் மணமகனுக்குத் திடீரெனக் காயம் ஏற்படுகிறது. வலியால் அவர் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுத் தலையைப் பிடித்தபடி நிற்க, அருகே இருக்கும் மணப்பெண் அதைக் கவனிக்காமல் தொடர்ந்து தீப்பொறிகளைச் சுட்டபடி நிற்கிறார். சில நொடிகள் வரை மணமகனுக்கு ஏற்பட்ட பாதிப்பை மணப்பெண் உணரவில்லை. மகிழ்ச்சியாகத் தொடங்கிய அந்தத் தருணம், சில வினாடிகளில் பதட்டமானதாக மாறிய காட்சி காண்போரை அதிர வைத்துள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். வெறும் புகழுக்காகவும், சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காகவும் இது போன்ற உயிரைப் பணையம் வைக்கும் செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான நுழைவு முறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், மகிழ்ச்சியான தருணங்களைப் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

