தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விவசாயிகளைத் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் 'தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய வசூல் நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் மற்றும் விதிகள் 2025' ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும் இப்புதிய விதிகளின்படி, மாநிலத்தில் இயங்கும் நுண் நிதியியல் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் முகமைகள் அனைத்தும் அரசு இணையதளத்தில்முறையாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் கடன் வணிகத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்பதோடு, இதற்கான பதிவுச் சான்றிதழ் மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடன் வசூலிக்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், கடனாளிகளுக்கு எவ்விதமான மிரட்டலோ அல்லது வற்புறுத்தலோ அளிக்கக் கூடாது என்பதையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே கடன் பெற வேண்டும் என்றும், கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

