உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆவி பயத்தைப் போக்குவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலித்து கோவில் கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் அடிக்கடி மர்மமான முறையில் மயங்கி விழுந்ததற்குக் காரணம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் ஆவிதான் என்று அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.
இந்த மூடநம்பிக்கையின் விளைவாக, ஆவியைச் சாந்தப்படுத்த பள்ளி வளாகத்திலேயே ஒரு சிறிய கோவிலைக் கட்டப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 218 மாணவர்களிடம் தலா 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, ஆசிரியர்களின் பங்களிப்புடன் சுமார் 25,000 ரூபாய் செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பள்ளி வளாகத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டது மற்றும் மாணவர்களிடம் நிதி வசூலித்தது தொடர்பாகக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன. இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகியுள்ள முதன்மைக் கல்வி அலுவலர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

