மும்பையின் டோம்பிவிலி பகுதியில் உள்ள கல்யாண்-டோம்பவிலி மாநகராட்சிக்கு சொந்தமான சாஸ்திரிநகர் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அரங்கேறிய வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 33 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தைப் பிறப்பிற்குப் பின் அவசரச் சிகிச்சைப் பிரிவு தேவைப்படலாம் என்பதால், அங்குள்ள படுக்கைகள் நிரம்பியிருந்த காரணத்தால் மருத்துவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, நோயாளியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த சிவசேனா கட்சியின் நகராட்சி உறுப்பினர் ரமேஷ் மகாத்ரே மற்றும் அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ரமேஷ் மகாத்ரே மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவர், செவிலியர் மற்றும் வருகைதந்த மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இந்த அநாகரிகமான அத்துமீறல் இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
https://www.instagram.com/reel/DafI642ITrl/?utm_source=ig_web_button_share_sheet
இந்தத் தாக்குதலைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் சாஸ்திரிநகர் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களின் வழக்கமான வெளிநோயாளி சேவைகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அவசர மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் தொய்வின்றி இயங்கின. இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய மகாராஷ்டிர மருத்துவ உறைவிட மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகாராஷ்டிர முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.

