தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, திமுக கூட்டணியின் நீண்டகால தோழமைக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அக்கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.
தமிழக முதலமைச்சராகத் த.வெ.க தலைவர் விஜய் பொறுப்பேற்றது முதல் அவருக்கும் திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், திமுக கூட்டணியை முறித்துக் கொண்ட மதிமுக, தற்போதைய முதல்வர் விஜய்யின் அரசுக்குத் தனது அசைக்க முடியாத ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய திமுக ஆட்சியில் கமிஷன் கலாச்சாரமும், லஞ்ச ஊழலும் தலைவிரித்தாடியதாகக் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். முந்தைய ஆட்சியில் எந்தவொரு அனுமதிக்கும் பல லட்சங்கள் முதல் கோடிக்கணக்கில் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை இருந்ததாகவும், ஆனால் தற்போதைய விஜய் ஆட்சியில் 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உறுதியாகத் தொடரும் என்றும், இந்த அரசை வீழ்த்த திமுகவினர் போடும் திட்டங்கள் ஒருபோதும் பலிக்காது என்றும் வைகோ ஆணித்தரமாகக் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தபோது, தொண்டர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் த.வெ.க அரசுக்கு மதிமுக என்றும் அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

