ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கருணை அடிப்படையிலான அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக, 23 வயது இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாயையே கூலிப்படை வைத்து படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்த நீரஜ் சர்மா (45) என்ற பெண்மணி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்தார். முதலில் இது சாதாரண சாலை விபத்து என்று கருதப்பட்ட நிலையில், நீரஜ் சர்மாவின் சகோதரர் ராகேஷ் அளித்த சந்தேகத்தின் பேரிலான புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், இது விபத்து அல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை என்பது அம்பலமானது.
விசாரணையில், நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக நீரஜ் சர்மாவுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்துள்ளது. இந்த வேலையையும் சொத்தையும் கைப்பற்ற நினைத்த அவரது மகள் ஆயுஷி, தாயுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் பேராசை காரணமாக, தனது மாமா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்ய ஆயுஷி சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகக் கூலிப்படையை ஏவி, விபத்து போல சித்தரித்துக் கொடூரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தற்பொழுது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மகள் ஆயுஷி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வரும் நிலையில், வேலைக்காகப் பெற்ற தாயையே கொன்ற இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

