தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடித்த படங்களின் எண்ணிக்கையை விட, அவர்கள் திரையில் விதைத்த நினைவுகளே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றன.
அந்த வரிசையில், 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எதார்த்தமான தோற்றம், வசீகரிக்கும் தெத்துப்பல் புன்னகை மற்றும் 'கண்கள் இரண்டால்' பாடலில் அவர் காட்டிய கண் அசைவுகள் என இன்றும் ரசிகர்களின் 'ஆல்டைம் கிரஷ்' ஆக வலம் வருகிறார். படத்தில் இவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸில் செய்த துரோகத்திற்காக ரசிகர்கள் இவரை திட்டித்தீர்த்தாலும், நிஜ வாழ்க்கையில் இவருக்கு தற்போது வீசத் தொடங்கியிருக்கும் புது வசந்தம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாதியின் தந்தை இந்திய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றியபோது ரஷ்யாவில் பிறந்த சுவாதி, பின்னர் ஹைதராபாத்தில் வளர்ந்தார். சிறு வயது முதலே பேச்சு சாதுரியம் மிக்கவராக இருந்ததால், தெலுங்குத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கினார். அங்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளியான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் எளிமையான மேக்கப்பில் நடித்து ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'வடகறி' உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார்.
https://www.instagram.com/p/Dah5zN1j0fh/?hl=en&img_index=1
திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்ற விமானியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார் சுவாதி. எனினும், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்ததாக வதந்திகள் பரவின. தனது விவாகரத்து குறித்து எவ்வித பொது மேடைகளிலும் பேசாமல், எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் அமைதி காத்து வந்தார் சுவாதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மந்த் ஆப் மது' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த சுவாதிக்கு, அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோத்தியுடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் காதலாக மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை மிகவும் எளிமையான முறையில் சுவாதி ரெட்டி கரம்பற்றியுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, 'நியூ பிகினிங்' (New Beginning) என்று பதிவிட்டுள்ள சுவாதிக்கு, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். தனது முதல் திருமண முறிவை மூலதனமாக்கி யாரிடமும் அனுதாபம் தேடாமல், யாரையும் குறை சொல்லாமல், தன் உழைப்பை மட்டுமே நம்பிப் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள சுவாதியின் இந்த நெகிழ்ச்சியான முடிவை சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டி, "எப்போதும் இதே புன்னகையோடு இருங்கள்" என மனதார வாழ்த்தி வருகின்றனர்.

