ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சுமார் 100 கி.மீ வேகத்தில் பேருந்தை இயக்கும்போது, தனது மொபைல் போனில் ஏதோ ஒரு வீடியோவை உற்றுப் பார்த்துக் கொண்டே செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கைகளை ஸ்டீயரிங்கில் வைக்காமல், முழங்கைகளால் பேருந்தை கட்டுப்படுத்தியவாறு, அவ்வப்போது மட்டுமே சாலையை கவனித்து அவர் வாகனம் ஓட்டியது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நடத்துனரும் சாலையை கவனிக்காமல் படுத்துக்கொண்டே தனது மொபைல் போனைப் பயன்படுத்தியது அலட்சியத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகாத நிலையிலும், நெடுஞ்சாலைகளில் தனியார் பேருந்து ஊழியர்களின் இத்தகைய ஆபத்தான செயல்பாடுகள் வழக்கமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து, இவ்வளவு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் சில நொடிகள் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும் என சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

