கடும் குளிரிலும், பனிப்பாறைகளிலும் தேசத்தைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்கள், கல்லைப் போல உறைந்துபோன ரொட்டிகளைச் சாப்பிடும் நிலையிலும் தங்களின் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சப் சப் கே’ திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியைப் போல, உறைந்துபோன கடினமான ரொட்டியை வெட்டுவதற்கு ரம்பம் கேட்கும் வீரரின் அந்தச் செயல், எல்லைப் பகுதிகளில் நிலவும் சவாலான வாழ்க்கைச் சூழலை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
வீட்டில் நாம் மென்மையான ரொட்டிகளைச் சாப்பிடும்போது, எல்லையில் உள்ள நமது வீரர்கள் கடும் குளிரினால் இறுகிப்போன உணவையே மதிய உணவாக உட்கொள்கின்றனர். “மற்ற நாட்களை விட இன்று ரொட்டி மென்மையாக இருக்கிறது” என்று அவர்கள் விளையாட்டாகப் பேசிக்கொள்வது, அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எவ்வளவு மனவலிமையுடன் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. வத்சலா சிங் என்ற பயனர் X தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, இதுவரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், வீரர்களின் தியாகத்தையும் அவர்களின் நேர்மறையான எண்ணத்தையும் பாராட்டி ‘சல்யூட்’ அடித்து வருகின்றனர். “இவ்வளவு கடினமான சூழலிலும் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது வியக்க வைக்கிறது” எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பனிப்பாறைகளில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் இந்த வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.

