சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு, தமிழக காவல்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், விதிகளை மீறியதாகக் கூறி வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் நேற்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் ஆஜரான 9 காவலர்களும், “நாங்கள் கொலை செய்யும் நோக்கில் இதைச் செய்யவில்லை, இது எதிர்பாராத விதமாக நடந்தது” எனக் கூறி, தங்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கெஞ்சினர். அவர்களின் வழக்கறிஞர்களும், இது ‘அரிதினும் அரிதான வழக்கு’ அல்ல என்றும், குற்றவாளிகள் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இதற்கு நேர்மாறாக, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிமன்றத்தில் ஆஜராகி, “எந்தத் தவறும் செய்யாத என் கணவரையும் மகனையும் கொடூரமாகக் கொன்றுவிட்டனர், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காத வகையில் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தச் செயல் மனித கண்ணியத்தை முற்றிலும் மீறுவதாக உள்ளது என்றும், சமூகத்தில் இது ஏற்படுத்திய பாதிப்பு அளவிட முடியாதது என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள் என்றும், அவர்கள் முழு உணர்வுடனேயே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். “இவர்களைத் திருத்துவதற்கான வாய்ப்பை வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளிகளின் வயது மற்றும் குடும்பச் சூழலைக் காரணமாகக் காட்டி கருணை காட்ட முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார், இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைத்த நீதியாகக் கருதப்படுகிறது.

