முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளியுமான தோப்பு வெங்கடாசலம் திமுகவிலிருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பணியாற்றிய இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இருப்பினும், ஈரோடு மாவட்ட திமுகவில் மற்றொரு முன்னாள் அமைச்சரான முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே கட்சிப் பணிகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் உரசல்களும் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவரது கட்சிப் பொறுப்புகளையும் திமுக தலைமை பறித்தது. இதனிடையே கட்சி விலகல் குறித்த தனது முடிவை அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், விரைவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

