தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு ₹35 கோடி குதிரை பேர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி.
செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) இல்லாததைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த ஜாமீனை வழங்கியிருந்தாலும், இது தற்காலிக நிம்மதி மட்டுமே என்பதை உணர்த்தும் வகையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்வர் விஜய் தற்போது சட்ட வல்லுநர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வழக்கில் அரசு தரப்பை வலுப்படுத்த, சிங்கப்பூருக்குத் தப்பி ஓடிய முக்கியப் புள்ளியைக் கைது செய்வது அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. நீதிமன்ற வாதத்தின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான், இந்தச் சதியில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளி ஒருவர் சிங்கப்பூரில் இருந்தபடியே ஹவாலா பணத்தை வழங்க முயன்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆதாரங்களின் பலவீனம் மற்றும் புகாரில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளதால், தப்பியோடிய நபரை சர்வதேச போலீஸ் (Interpol) உதவியுடன் உடனடியாகக் கைது செய்து தமிழகம் கொண்டு வரவும், அவரிடமிருந்து ஆடியோ, வீடியோ போன்ற அசைக்க முடியாத டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்றவும் காவல் துறைக்கு முதல்வர் விஜய் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “சட்டசபையில் திமுகவிற்கு வெறும் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது அரசை கவிழ்க்க முடியாது, இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல” என்று வாதாடினார். ஆனால், தவெக அரசோ இதனை வெறும் சபாநாயகருக்கு எதிரான விஷயமாகக் கடந்து போகத் தயாராக இல்லை. 10 தவெக எம்எல்ஏக்களுக்கு தலா ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசி, ஹவாலா பணத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முற்றிலும் கலைக்க நடந்த மிகப்பெரிய சதித் திட்டம் இது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் மிக வலுவாக முன்வைக்க அரசு தரப்பு சட்டக் குழு வியூகம் வகுத்து வருகிறது.
நாளை முதல்வர் விஜய் கரூருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், செந்தில் பாலாஜியை சட்ட ரீதியாக முடக்க நினைத்த தவெகவின் திட்டம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அரசு தனது முயற்சியைக் கைவிடவில்லை. சிங்கப்பூர் புள்ளியைப் பிடிப்பதன் மூலமும், சுப்ரீம் கோர்ட் மேல்முறையீடு மூலமும் செந்தில் பாலாஜிக்கு அடுத்தகட்ட நெருக்கடிகளைக் கொடுத்து வழக்கை இறுதி நிலைக்குக் கொண்டு செல்ல முதல்வர் விஜய் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

