தமிழக அரசியலில் 'கொங்கு மண்டலத்தின் சாணக்கியர்' என்று அறியப்படும் செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ள நிலையில், தனது கோட்டையான கரூரையும் தனது பிடிக்குள்ளேயே வைத்திருக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
கரூரில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தியாகராஜன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் இல்லாததால் அது நிராகரிக்கப்படலாம் என்ற சூழல் நிலவியது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட செந்தில் பாலாஜி, தனது தம்பி அசோக்கை கரூரில் மாற்று வேட்பாளராக அனைத்து ஆவணங்களுடனும் தயார் நிலையில் வைத்திருந்தார்.
இந்த அரசியல் சதுரங்கத்தின் அடுத்த கட்டமாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கும் மாற்று வேட்பாளராக அசோக்கே மனுத் தாக்கல் செய்துள்ளார். அதாவது, ஒரே நேரத்தில் அண்ணனுக்காக கோவையிலும், அண்ணனின் ஆதரவாளருக்காக கரூரிலும் மாற்று வேட்பாளராக அசோக் களம் இறங்கியுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒருவேளை கரூரில் தியாகராஜனின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால், அங்கு அசோக் திமுகவின் முதன்மை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக மாறுவார்; அதே சமயம் கோவையில் தனது மாற்று வேட்பாளர் மனுவை அவர் வாபஸ் பெற்றுவிடுவார்.
கரூரில் தனது ஆதரவாளர் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் அவர் தனக்கென ஒரு தனி அரசியலை உருவாக்கித் தனக்கு விசுவாசமாக இருக்காமல் போய்விடுவாரோ என்ற தொலைநோக்குச் சிந்தனை செந்தில் பாலாஜிக்கு இருந்ததாகத் தெரிகிறது. சொந்தக் குடும்ப உறுப்பினரே அங்குப் போட்டியிடுவது தனது அரசியல் ஆதிக்கத்தைத் தக்கவைக்கப் பாதுகாப்பானது என அவர் கருதியிருக்கலாம். இந்த அதிரடி நகர்வுகள் அனைத்தும் திமுக தலைமையின் ஒப்புதலோடுதான் நடக்கிறதா அல்லது இது செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட வியூகமா என்ற முணுமுணுப்புகள் கட்சியினரிடையே எழுந்துள்ளன.
மறுபுறம், இந்தத் தகவல் அதிமுக மற்றும் பாஜக தரப்புக்குக் கசிந்த நிலையில், இதனைப் பெரிய சர்ச்சையாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இந்த நெருக்கடியை உணர்ந்த தியாகராஜன், மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளான நேற்று மாலை 5 மணி முடிவதற்குச் சற்று முன்பாக, 4:40 மணிக்கு அவசரமாகத் தனது பிரமாணப் பத்திரத்தை ஆன்லைனில் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் ஆரம்பக்கட்டத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது இதுவும் ஒரு தற்காப்பு வியூகமா என்பது இன்று நடக்கும் மனுப் பரிசீலனையில் தெளிவாகிவிடும். கரூரின் அரசியல் களம் அண்ணன் – தம்பி வசம் செல்லுமா என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்குகிறது.

