கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம் தஹேஜ் துறைமுகத்திற்கு இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு வந்த 'அல் ரெகய்யாத்' என்ற கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் தீப்பிடித்துக் கரும்புகை வெளியேறியதுடன், கப்பலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இதில் பயணித்த 4 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 29 பேருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்போ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ எதுவும் நிகழவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எல்.என்.ஜி கப்பல் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று கத்தார் குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், ஈரான் மீது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் எண்ணெய் தடையை விதித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், அப்பகுதியில் நிலவும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளன.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாணி இடையே கடுமையான வான்வழிப் போரும், அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான எதிர் தாக்குதல்களும் அரங்கேறின. அப்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலக அளவில் எரிபொருள் மற்றும் உர விநியோகம் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் 100 நாட்களுக்கும் மேலான மத்தியஸ்த முயற்சிகளால் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், மீண்டும் கப்பல்கள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள், இந்த உடன்பாட்டைச் சீர்குலைத்து மீண்டும் முழு வீச்சில் போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

