கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், முறையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடும் நாம் நமது ஆழமான, இதயப்பூர்வமான இரங்கலை முதற்கண் பகிர்ந்துகொள்கிறோம். இத்தகைய துயரங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவை நேரில் வழங்கவும் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், சிபிஐ விசாரணையை திசைதிருப்பும் வகையில் பேசியதாகக் கூறி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திமுக தரப்பிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். “திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலேயே விஜய் பெயர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத போது, அவரை எவ்வாறு குற்றவாளி எனக் கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆவணங்களைச் சரியாகப் படித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வருமாறு காட்டமாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திமுக தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் பின்னடைவைச் சந்தித்த போதிலும், திமுக இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சிபிஐயிடம் தற்போது ஒரு புதிய புகார் மனுவை அளித்துள்ளார். அதில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையிலும் பேசியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அடங்கிய பென் டிரைவ் மற்றும் செய்திக் குறிப்புகளையும் சிபிஐயிடம் ஆதாரமாக வழங்கியுள்ள திமுக, முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்தை சிபிஐ உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஆதவ் அர்ஜுனா மீது உடனடியாகப் புதிய வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

