சென்னை அடையாறில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லாதது பெரும் குறையாக இருப்பதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
தமக்கு அரசியல் முகவரியை வழங்கி, அரசியலுக்கு அழைத்து வந்த மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனை தம்மால் என்றும் மறக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், சட்டசபையில் தலைவர் ஸ்டாலினையும், ஜெ. அன்பழகனையும் தாம் மிகவும் ‘மிஸ்’ செய்வதாகக் கூறினார். மேடையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் நகைச்சுவையாக உரையாடி கலகலப்பை ஏற்படுத்திய உதயநிதி, தேர்தல் தோல்விக்கு பிறகும் திமுக தொண்டர்கள் சோர்வடையாமல், ஆளுங்கட்சியாக இருந்ததை விட எதிர்க்கட்சியாக தற்போது மிகத் தீவிரமாக மக்கள் பணிகளில் சுழன்று வருவதாகப் பெருமிதம் கொண்டார்.
அதிமுக கிட்டத்தட்ட பாதியாக உடைந்துவிட்ட நிலையில், திமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முழங்கிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழக) அரசையும் கடுமையாக விமர்சித்தார். புதிய ஆட்சி அமைந்து 60 நாட்களாகியும் மக்களுக்கு எந்தவொரு உருப்படியான திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்தவில்லை என்று சாடிய அவர், “ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சியையும் ரீல்ஸ் போட்டே நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள்” என தவெக அரசை நேரடியாகத் தாக்கினார். மேலும், திமுகவை வீழ்த்த நினைத்து தற்போதைய ஆளுங்கட்சி திணறி வருவதாகவும், அதனால் தான் திமுக மீது அடுக்கடுக்கான அவதூறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

