மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கர்டே என்ற போலிச்சாமியார் பிலோலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக படுர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வந்த இவர், கையில் எப்போதும் ஒரு நீண்ட வாளையும் எலுமிச்சையையும் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.
மேலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைக் குணப்படுத்துவதாகவும், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி, அப்பாவி மக்களிடமிருந்து பெருமளவு பணத்தையும் நகைளையும் அபகரித்து வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின் போது, அந்தப் போலிச்சாமியார் கையில் வாளுடன் பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புகார்களின் அடிப்படையில் அதிரடிச் சோதனை நடத்திய காவல்துறையினர், அவரைத் தடுப்பதற்கு முயன்ற அவரது ஆதரவாளர்கள் இருவரையும் சேர்த்துக் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் ‘சூனிய எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

