ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் எனப் பழிசுமத்தி, அந்நாட்டின் மீது அமெரிக்கா அண்மையில் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆனால், “நாங்கள் எந்தவொரு கப்பலையும் தாக்கவில்லை” என திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தேவையின்றி இப்படியொரு தாக்குதலை நடத்தி, பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை அமெரிக்கா உருவாக்கியிருப்பதை சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்த விபரீதச் சூழலை, “வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்ட” கதையாக அமெரிக்கா தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளதாக அவர்கள் வர்ணிக்கிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், ஒட்டுமொத்த அரபு உலகமும் தற்போது உச்சகட்ட பதற்றத்தில் தவித்து வருகிறது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தப் போவது உறுதி. இந்த போர்ச் சூழல் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை என்ற கசப்பான சூழலே உருவாகியுள்ளது.

