வேலூர் அருகே திருமணமான பெண்ணுடனான கள்ளத்தொடர்பு போட்டியில், 'நீ எனக்கு மட்டும்தான்' என்று கூறி பெயிண்டர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகேயுள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (42) என்ற பெயிண்டரும், சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் (26) என்ற வாலிபரும் தங்கள் மனைவிகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில், அந்தப் பெண்ணுடன் வினோத்குமாருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு பலமாக ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், அந்தப் பெண்ணை ராகுலுடன் பேசக் கூடாது என்று கண்டித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்ற வினோத்குமார், `ராகுலுடன் பழகக் கூடாது, நீ எனக்கு மட்டும்தான்' என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து, வினோத்குமாரை வீட்டை விட்டுப் போகுமாறு எச்சரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ராகுலுக்கும் வினோத்குமாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் அவர்களை விலக்கி அனுப்பி வைத்தனர். இருப்பினும், இதில் சமாதானமடையாத ராகுல், வினோத்குமாரைப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் காத்திருந்தார்.
அன்று இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் வினோத்குமார் மது அருந்திக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ராகுல், அவரிடம் மீண்டும் தகராறு செய்து, போதையில் இருந்த வினோத்குமாரை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி, கழுத்தில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். கொலை செய்த பிறகும் ஆத்திரம் அடங்காமல், “அவள் எனக்கு மட்டும்தான்” என்று கத்தியபடி கொலையைப் புரிந்துவிட்டு, கம்பியைக் கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியுள்ளார். மறுநாள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்குமாரின் உடலை மீட்ட அரியூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி ராகுலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

