சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் பிணைப்பைக் காட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு குரங்கு அவனது மார்பின் மீது ஏறி ஒரு குழந்தையைப் போல உறங்கும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞன், திடீரென விழிப்பு வந்தபோது தன் மீது ஒரு குரங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த வீடியோவை பதிவு செய்துள்ள அந்த இளைஞன், பயத்துடன் உதவி கோருவதையும் காண முடிகிறது. இரவு நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தான் நிம்மதியாக உறங்க வந்ததாகவும், ஆனால் எங்கிருந்து வந்ததென்று தெரியாத இந்தக் குரங்கு தன்னைத் தன் தாயாக நினைத்து ஒட்டிக் கொண்டு தூங்குவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். குரங்கு எங்கே கடித்துவிடுமோ என்ற அச்சத்தில், தன்னை மீட்பதற்காக யாராவது மீட்புக் குழுவினரை அனுப்பி வையுங்கள் என்று அவர் பதற்றத்துடன் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
'ஜீவா ஃபிட்னஸ்' (@jiva_fittnes) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். "வாழ்த்துகள், நீங்கள் அம்மாவாகிவிட்டீர்கள்" என்றும், "அந்தக் குரங்கு உங்களை ஆஞ்சநேயராக நினைத்துவிட்டதோ" என்றும் கிண்டலாகக் கருத்துகளைப் பகிர்ந்து இந்த வைரல் வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

