Dailyhunt
போதைப்பொருள் கடத்தல் புகழ் ஜாபர்சாதிக் வேதனை - விவரம்

போதைப்பொருள் கடத்தல் புகழ் ஜாபர்சாதிக் வேதனை - விவரம்

Thamizh Valai 3 weeks ago

பிரபல தொழிலதிபர்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்,முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைஅமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின்,சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி,வருமான வரித்துறை, என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும்படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் படங்கள் குறித்தும் ஜாபர் சாதிக்,பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார்.

இதுகுறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது…..

என்னைச்சுற்றிப் பரவிவரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் உங்கள் முன் வந்திருக்கிறேன்.6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்தச் சோதனை 8 ஆம் அதிகாலை 3 மணிவரை நீண்டது.வீடு முழுவதும் அவர்கள் முழுமையாகச் சோதனை செய்தார்கள்.

அவர்கள் தேடிவந்த எந்த விசயத்துக்கும் எனக்குச் சம்பந்தமே இல்லை.எதுவும் கிடைக்கவில்லை.இறுதியில் அவர்கள் "Nil Seizure" என்று பதிவு செய்து சென்றார்கள்.

தேர்தல் பணம் அல்லது வேறு ஏதாவது தொடர்பாக வந்திருந்தாலும்,எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திச் சென்றார்கள்.ஆனால் சில மீடியாவில் ஆயிரக்கணக்கான கோடிகள் கைப்பற்றப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.அது முற்றிலும் தவறு.நடந்ததை மட்டுமே உண்மையாகச் சொல்லவேண்டும்.இல்லாததை உருவாக்கிப் பேசுவது எங்களுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.இப்படி வரும் செய்திகள் அவர்களையும் பாதிக்கிறது.இதற்கு முன்பே ஐடி நோட்டீஸ் வந்தது.அதற்கு என் ஆடிட்டரும்,வழக்கறிஞர்களும் பதில் அளித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.அந்த நிலைமையிலேயே மீண்டும் சோதனை நடந்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல்நேரம் என்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதிகாரிகள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நாங்கள் முழுமையாகப் பதில் அளித்தோம்.அவர்கள் திருப்தியுடன் சென்றார்கள்.என்சிபி மற்றும் தேர்தல் அதிகாரிகளும் வந்து சோதனை செய்தார்கள்.அவர்களும் எதுவும் இல்லை என்று கூறிச் சென்றார்கள்.நான் எதையும் மறைக்கவில்லை.என்னிடம் உள்ள அனைத்தும் சட்டப்படிதான் இருக்கிறது.

டெல்லி வழக்கு குறித்துப்பேச வேண்டுமென்றால்,அது தற்போது கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.நான் சட்டப்படி அந்த வழக்கைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.என் லீகல் டீமும் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது.அந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்கிறேன்.இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கு நீண்டு கொண்டே இருக்கிறது.இது கோர்ட்டில் நடக்கும் ஒரு சாதாரண நடைமுறை.தீர்ப்பு வந்தவுடன் நான் நேரடியாக உங்களிடம் பகிர்வேன்.அதற்கு முன்பே பெரியதொகைகள் கூறி என்னைக் குற்றம் சாட்டுவது சரியல்ல. என் தொடர்புடைய எந்த இடத்திலும் ஒருகிராம் கூட தவறான பொருள் கிடைக்கவில்லை.நான் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.அரசியலிலிருந்து விலகி இருக்கிறேன்.யாருக்கும் நான் பணஉதவி செய்யவில்லை. பாண்டிச்சேரி அல்லது சென்னை என்று எங்கும் நான் பணம் கொடுத்ததில்லை.நான் என் குடும்பம்,வேலை,மற்றும் கோர்ட் விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.கடந்த சிலநாட்களில் பலதுறைகள் என்னை விசாரித்துள்ளன.அதில் ஐடி துறை மட்டும் முறையாகவும் தெளிவாகவும் செயல்பட்டது.மற்ற துறைகளும் வந்து சோதனை செய்து எதுவும் இல்லை என்று கூறிச் சென்றன.என் வீட்டில் சாதாரண குடும்பச் செலவுக்கான சுமார் 40,000 ரூபாய் மட்டுமே இருந்தது.அதற்கும் மேலாக எந்தப்பெரிய தொகையும் இல்லை.இதை தயவுசெய்து சரியாக பதிவு செய்யுங்கள்.
தவறான தகவல்களை பரப்பவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்.நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்.என் நிலையைப் புரிந்துகொண்டு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்.நான் தற்போது என் படவேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் என் தயாரிப்பில் உருவாகும் "மங்கை" மற்றும் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படங்களை உங்களிடம் கொண்டுவருகிறேன். நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai