அஇபுதமமுக என்ற கட்சியைத் தொடங்கிய சசிகலா,மருத்துவர் இராமதாசுடன் கூட்டணி சேர்ந்தார். பாமகவைப் பறித்துக் கொண்ட மகன் அன்புமணிக்கு எதிராக அவரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
சசிகலாவும், இராமதாசும் எதிரிகளை வீழ்த்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரை இராமதாசு நிறுத்துவாரா? அல்லது சசிகலா நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மகனைக் கூட்டணியில் சேர்த்த எடப்பாடி மீது இராமதாசு கடும் கோபத்தில் இருந்தார்.எடப்பாடி தொகுதியில் பாமகவுக்கு கூடுதல் செல்வாக்கு இருக்கிறது. இதனால் இராமதாசுதான் வேட்பாளரை நிறுத்துவார் எனச் சொல்லப்பட்டு வந்தது. இதனால் சசிகலா கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்தவில்லை.
இந்நிலையில், இராமதாசு கடைசிவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.எடப்பாடி தொகுதியில் பாமகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. பாமக இரண்டாக உடைந்த நிலையில் இராமதாசு தரப்பினருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும். ஆனால் இராமதாசு தரப்பில் வேட்பாளரை நிறுத்தவிடாமல் எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தினார் என்றும் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
ஆரம்பம் முதலே இதனைக் கண்காணித்து வந்த சசிகலா,அதிரடியாக கடைசிநேரத்தில் தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்.
எடப்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை களத்தில் இறக்கியுள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து சசிகலா என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்றார்.
தனக்கு எதிராக இராமதாசு வேட்பாளரை அறிவிக்காததால் மகிழ்ச்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி,கடைசி
நேரத்தில் சசிகலா வேட்பாளரை இறக்கியுள்ளதால் கலக்கத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

