Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் பேசியதை ஏற்கமுடியாது - பெ.சண்முகம் எதிர்ப்பு

விஜய் பேசியதை ஏற்கமுடியாது - பெ.சண்முகம் எதிர்ப்பு

Thamizh Valai 4 days ago

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார்.ஆனால் சட்டம் ஒழுங்கு,காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் இந்தப் 'பதிலுரையில்' எந்தப் பதிலும் இடம் பெறவில்லை.

மக்கள் பிரச்சனை பற்றிப் பேசுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியைக் குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன.ஒன்றியஅரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக்கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும்கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம்.எனவே அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.

அவசர நிலைக் காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு.ஆனால் அவசரநிலைக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது.உருவக்கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.

சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனிதத் தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரைப் பாராட்டிப் பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும்.கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை,அதுவும்கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கமுடியாது.

ஆனால் ஏழை,எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது,அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai