Berijam lake kodaikanal: தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது.
கொடைக்கானல் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பள்ளி விடுமுறை காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலைவாஸ்தளங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. பழனி மலைத்தொடரில் 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள் மற்றும் அருவிகளுக்கு பெயர் பெற்றது. கொடைக்கானல் ஏரி, தூண்பாறை, குணா குகை, கோக்கர்ஸ் வாக், மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகியை இங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களாகும்.
கொடைக்கானில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது. இது கொடைக்கானலில் இருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பேரிஜம் ஏரியில் மனத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இயற்கை எழில் மிகு சுற்றுலா தலங்கள் அமைந்து இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் இந்த பேரிஜம் ஏரிக்கு சென்று வருவதற்கு நுழைவு கட்டணம் செலுத்தி செல்கின்றனர்.குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டும் பேரிஜம் ஏரி பகுதிக்கு வனத்துறை அனுமதித்து வருகிறது.
: நீலகிரியில் இன்று மின் தடை அறிவிப்பு.. 7 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது மக்களே...
ஒரு நாளைக்கு 30-35 வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறை அனுமதி அளிக்கிறது. காலையில் சீக்கிரம் சென்றால் மட்டுமே நுழைவுச்சீட்டு பெற்று உள்ளே செல்லமுடியும். வனத்துறை சோதனைக்கு பிறகே பேரிஜம் ஏரிக்கு அனுமதிக்கப்படுகிறது. இது ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும்.
இந்நிலையில் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் இந்தப்பகுதிக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோடை விடுமுறை காரணமாக,பேரிஜம் ஏரிக்கு செல்ல இருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் காணப்படுகிறது.பொதுமக்கள் நலன்கருதி வனத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.
: நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதுதான்.!
கொடைக்கானலில் மழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே கொடைக்கானலில் இன்றும் மிதமானது முதல் கனமழை எதிர்பார்க்கலாம்.

