Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CSK: சிஎஸ்கே அணியுடன் தோனி மோதலா.? இனி IPL -ல் ஆட மாட்டாரா.? சிஇஓ விளக்கம்!

CSK: சிஎஸ்கே அணியுடன் தோனி மோதலா.? இனி IPL -ல் ஆட மாட்டாரா.? சிஇஓ விளக்கம்!

CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அடையாளமாக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.

குறிப்பாக 2026 ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியிலும் களமிறங்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த சீசனுடன் அவர் முழுமையாக அணியில் இருந்து விலகப் போகிறாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

19 ஆண்டுகளில் முதல் முறை

2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோனி இணைந்துள்ளார். அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், சிஎஸ்கே அணியின் முகமாகவே அவர் பார்க்கப்பட்டார். அவரது தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதே நேரத்தில், 2026 சீசனில் தோனி ஒரு போட்டியிலும் விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இருப்பினும், அணியுடன் பயணங்களில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டார். இளம் வீரர்களுடன் ஆலோசனைகள் வழங்கியும், அணியின் திட்டங்களில் முக்கிய பங்காற்றியும் இருந்ததாக கூறப்படுகிறது.

தோனி குறித்து காசி விஸ்வநாதன் விளக்கம்

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தோனியுடன் இதுவரை எந்தவொரு எதிர்கால பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "தோனி எப்போதும் தனது முடிவுகளை தானாகவே எடுப்பார். அதை நாங்கள் மதிக்கிறோம். அவர் வீரராக இருந்தாலும், பயிற்சியாளராக இருந்தாலும் அல்லது வழிகாட்டியாக இருந்தாலும், சிஎஸ்கே அணியில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இறுதி முடிவு முழுமையாக அவரை சார்ந்தது" என்று கூறினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தோனி நேரடியாக விளையாடாதபோதும், அவரது வருகை மட்டும் கூட சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. போட்டியின் அழுத்தமான சூழ்நிலைகளில் இளம் வீரர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் அணிக்குப் பெரிய ஆதரவாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, எதிர்காலத்தில் அவர் அணியின் வழிகாட்டி அல்லது பயிற்சி குழுவில் முக்கிய பொறுப்பை ஏற்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களும் தோனி எந்த வடிவிலாவது அணியுடன் தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் செயல்பாடு ஏமாற்றம்

2026 சீசனில் சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினார். மேலும், "தோல்விகளை நேர்மறையாக அணுகி, எங்கே தவறுகள் நடந்தன என்பதை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். அடுத்த சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிப்போம்" என்றும் தெரிவித்தார்.

- ஒரே போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி படைத்த வரலாறு.. மலைக்க வைக்கும் ஐபிஎல் சாதனைகள்!

மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் தோனி வருவாரா?

தோனி மீண்டும் வீரராக களமிறங்குவாரா அல்லது நிர்வாக பொறுப்பை ஏற்கவா போகிறார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், சிஎஸ்கே அணியுடன் அவரது உறவு தொடரும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி எந்த வடிவத்தில் ரசிகர்கள் முன் தோன்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi