கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களான முதல் மற்றும் இரண்டாம் மூன்று மாதங்கள், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
இந்தக் காலகட்டத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று, அல்லது ஏதேனும் உடல் நல பாதிப்பு, அவரது ஆரோக்கியத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், கருவின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும். சமீபத்திய ஆண்டுகளில், கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் ஒரு சில தொற்றுகள், குழந்தைகளிடையே ஆட்டிசம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படும். ஆட்டிசம் என்பது பிறந்த பிறகு மட்டும் உருவாகும் ஒரு நிலை அல்ல; ஆனால் அதன் தாக்கம் கர்ப்ப காலத்திலேயே ஏற்பட்டிருக்கலாம், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடையே நிலவும், அதிகரித்து வரும் இந்தத் தீவிரமான பிரச்சினை குறித்து, யசோதா மருத்துவமனைகளின் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணரான டாக்டர் என். வர்ஷா மோனிகா ரெட்டி கூறியவை இங்கே.
.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்று கருவில் உள்ள குழந்தையை எப்படி பாதிக்கும்
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு, ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும்போது, கர்ப்பிணியின் உடலே அதை எதிர்த்துப் போராடும். இந்தச் செயல்முறை தாய்வழி நோயெதிர்ப்புச் செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது. உடல் அழற்சி சார்ந்த மூலக்கூறுகளை வெளியிடுகிறது, அவை நஞ்சுக்கொடி வழியாக கருவிற்கு செல்லலாம்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த ஆபத்து நோய்த்தொற்றுடன் மட்டும் தொடர்புடையது அல்ல, மாறாக உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் எதிர்வினையுடனே அதிகம் தொடர்புடையது என்று மருத்துவர் கூறுகிறார். தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளத் தூண்டப்படும் இந்த சுழற்சி, கருவின் மூளை வளர்ச்சி, நரம்பணு உருவாக்கம் மற்றும் அவற்றுக்கிடையேயான இணைப்புகளைப் பாதிக்கக்கூடும்.
பின் வரும் தொற்றுக்கள் கருவில் குழந்தைக்கு ஆட்டிசம் ஆபத்தை அதிகரிக்கும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் எந்தவொரு தொற்றும், சளி, காய்ச்சல் கூட, கர்ப்பிணி மற்றும் கருவில் உள்ள குழந்தை ஆகிய இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு சில தொற்றுகள், குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அவற்றுள் ரூபெல்லா, ஃப்ளூ, ஹெர்பெஸ், சிறுநீர்ப் பாதை மற்றும் பிறப்புறுப்பு சார்ந்த பாக்டீரியா தொற்றுகள், ஆகியவை அடங்கும்.
கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில், அதாவது முதல் மூன்று மாதங்களில், இந்த நோய்த்தொற்றுகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால், குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் மூளை அமைப்பு வளர்ச்சி அடைகிறது.
கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை
கர்ப்ப காலத்தில் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கலாம்.
- சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
- சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
- முழுதாக சமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவை உண்பது.
- தவறாமல் கர்ப்பகால, மகப்பேறு பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.
- நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்
டாக்டர் ரெட்டியின் கூற்றுப்படி, எல்லா நோய்த்தொற்றுகளும் ஆட்டிசத்தை ஏற்படுத்துவதில்லை என்பதை புரிந்து கொள்வது அவசியம். மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றுடன் பிறக்கும் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறக்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள். எனவே, பீதியடைவதை விட, இது குறித்து விழிப்புணர்ச்சியுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். Disclaimer: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மருத்துவ ஆலோசனைகள் அல்ல. மருத்துவரின் பரிந்துரைகளை கேட்டு சிகிச்சை மற்றும் உணவு முறைகளை பின்பற்றவும்.

