கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது நடந்ததாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புகாரில், படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் கேரவனில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதாக அந்த நடிகை குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, வன்கொடுமை, பாலியல் அத்துமீறல் மற்றும் சிறைவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில் தொடுபுழா பகுதியில் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகு அவரை கொச்சிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அவர் நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் தீவிரத்தையும், கிடைத்துள்ள ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, ரஞ்சித்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் எர்ணாகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- 'திமுக பாதி கதர் கூட்டணி, பாதி காவி கூட்டணி..' திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் பேச்சு!
போலீஸ் தரப்பில், இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சம்பவம் நடந்தபோது நடிகை கேரவனில் இருந்து அவசரமாக வெளியேறியதை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ரஞ்சித் தலைமறைவாக இருக்க உதவியவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகையின் புகார், வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், ரஞ்சித்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அதே நேரத்தில், ரஞ்சித் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் எர்ணாகுளம் முதலாவது வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உண்மை நிலை தெளிவாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தன்னுக்கு எதிராக சதி நடக்கிறது என்றும், உண்மை இறுதியில் வெல்லும் என்றும் ரஞ்சித் தனது தரப்பில் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திரைப்படத் துறையிலும் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர் உறுப்பினராக இருந்த பெப்கா எழுத்தாளர் சங்கம் மற்றும் இயக்குநர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும், "பாலேரி மாணிக்கம்" திரைப்பட படப்பிடிப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பெண் புகார் அளித்திருந்தார்.
மேலும், இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில், இந்த முறை போதுமான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வலியுறுத்துகின்றனர். கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான நடிகை, கவுன்சிலிங் பெற்ற பின்னரே புகார் அளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், திரைப்படத் துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

