Madurai power cut: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.
கோடை வெப்பத்தை தவிர்க்க பலரும் வீடுகளில் மின்விசிறி, ஏர் கூலர்கள், ஏசி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மாநிலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டுகள் நிலவுகிறது. நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மின் தடை செய்யப்படுகிறது. புறநகர், கிராமப்பகுதியில் சொல்லவே தேவையில்லை. பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிகமாக மின் சாதனங்களை பயன்படுத்துவதால் சில இடங்களில் ஃபீடர்கள் ட்ரிப் ஆகின்றன அதனை சரிசெய்யும் போது மின் தடை ஏற்படுகிறது என வசதியாக நுகர்வோர் பக்கம் திருப்புகிறது மின்வாரியம். மின் நுகர்வு ஒருபக்கம் என்றால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த மாதங்களில் நடக்காததே இதற்கு காரணம் என்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடந்தது. இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவைக்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
: சென்னை - மும்பை ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயண சலுகை!
மதுரை மாவட்டத்தில் காளவாசல், பழங்காநத்தம், கே.புதூர், தெப்பம் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக சிரமங்களை சந்திப்பதாக புலம்புகின்றனர். மதுரையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், "கோடை விடுமுறை விட்டாச்சு குழந்தைங்க வீட்டுல இருக்காங்க. 3 வேளை சமையல் செய்யணும். துணிகளும் அதிகம் சேர்ந்துடுது. சமைச்சுக்கிட்டு இருக்கும் போது கரண்ட் கட்டாகிடுது. மிக்சி, க்ரைண்டர் எல்லாம் ஓடாதாதால் வேளை பாதியில் நிற்கிறது. வாஷிங்மெஷினில் கூட துணிகளை அப்புறம் போட்டு எடுத்துக்கலாம். வெளியில் கொளுத்து வெயிலால் நிம்மதியாக ஃபேன் கூட போட முடியவில்லை.இரவில் நன்றாக அயர்ந்து தூங்கும் போது மின் வெட்டு ஏற்படுது. வீடுகளில் நிலவும் புழுக்கம் மற்றும் அதிகப்படியான வெப்பம் காரணமாக தூக்கம் கெடுகிறது என புலம்புகின்றனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TANGEDCO) மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஃபீடர்கள் ட்ரிப் ஆகின்றன, மேலும் பொதுத் தேர்வுகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக பராமரிப்புப் பணிகள் செய்ய முடியவில்லை என்று கூறுகிறது. தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மின்மாற்றிகள், மின் கம்பிகள் மற்றும் ஃபீடர்கள் போன்ற உபகரணங்களின் வழக்கமான பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. வெடிப்புகள், தீ மற்றும் ஆபத்தான மின் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இரண்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வழக்கமான பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், தேர்வுகள் மற்றும் தேர்தல்களின்போது மின் தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் பெரிய அளவிலான பராமரிப்புப் பணிகளை நாங்கள் ஒத்திவைத்தோம். மார்ச் மாதத்தில் சிறிய மற்றும் அவசரகால பராமரிப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன" என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
: திமுக தோழர்களின் உழைப்பிற்கான பலன் மே 4-ம் தேதி பெற இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மே 4-ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் வாக்கு எண்ணும் மையங்களில் மின் தடை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், அங்கு EVM மற்றும் VVPATகள் வைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டு தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகு, மின்மாற்றிகள், மின் கம்பிகள் மற்றும் ஃபீடர்களுக்கு முழுமையான மின் தடை செய்து முழுமையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வோம். இது மே 10க்குப் பிறகு தொடங்கும்" என்றார்.

