Riyan Parag: ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் (Rajasthan Royals) கேப்டன் ரியான் பராக் சிக்கியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின இந்தப்போட்டியின் போது ராஜஸ்தான் அணி பேட்டிங் ஆடிய போது கேப்டன் ரியன் பராக் ஓய்வறையில் அமர்ந்துக்கொண்டு இ-சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வெளியானது. இந்தச் சம்பவம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 16-வது ஓவரின்போது ரியான் உடை மாற்றும் அறைக்குள் வேப் பயன்படுத்தியபோது இந்தச் சம்பவம் நடந்தது.
இந்த நிகழ்வு ஒளிபரப்பில் வெளிவந்ததால் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆர்ஆர் அணியின் கேப்டன் அடிப்படை அணி மற்றும் மைதான விதிமுறைகளை மீறியதற்காக விமர்சனத்துக்கு உள்ளானார். உடை மாற்றும் அறை மற்றும் அனைத்து மூடிய மைதானப் பகுதிகளிலும் புகைபிடிப்பது அல்லது வேப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, புகைபிடிப்பதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கடும் எதிர்வினையாற்றினர். பலரும் இந்தச் செயலின் பொருத்தமின்மை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், இந்த சமபவம் தொடர்பாக பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
: ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேற வாய்ப்பிருக்கா.. புள்ளி பட்டியல் சொல்வது என்ன?
இந்தியாவில் இ-சிகரெட் (e-cigarettes) உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் சேமிப்பு ஆகியவை 2019-ஆம் ஆண்டு முதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது சட்டவிரோதமானது.ஐபிஎல் போன்ற பெரிய லீக்கில் வீரர் ஒருவர் ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்தது இப்போது பேசுப்பொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான 40வது போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளின் லெவல் 1ஐ மீறியதற்காக அவருக்கு ஒரு குறை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ரியான் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.21 ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டார், இது "விளையாட்டை அவமதிக்கும் நடத்தை தொடர்பானது". இந்த சம்பவம் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரியான் ஆடை மாற்றும் அறையில் வேப் பயன்படுத்திய போது நடந்தது. ரியான் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவர் அமித் சர்மா விதித்த தடையை ஏற்றுக்கொண்டார்.
: ஐபிஎல்-ல் 9,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி.. அடுத்தடுத்த இடங்களில் யார்?
பிசிசிஐ மேலும் கூறுகையில், "ஐபிஎல்-இன் நற்பெயரைக் காக்க, தவறு செய்த அணி, அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்/வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான பிற வழிகளையும் பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் சர்ச்சை
ஆர்ஆர் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் சமீபத்தில் டக்-அவுட் பகுதியில் செல்போனை பயன்படுத்தியதால் செய்திகளில் இடம்பிடித்தார். ஐபிஎல் விதிகளின்படி, ஒரு மேலாளர் தொலைபேசி வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் அவர் அதை உடை மாற்றும் அறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். வைபவ் சூர்யவன்ஷிக்கு அருகில் செல்போன் பயன்படுத்தியபடி ஆர்ஆர் மேலாளர் காணப்பட்டார். அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடபாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தருக்கு, ஏசிஏ ஸ்டேடியம், கவுகாத்தியில் ஏப்ரல் 10, 2026 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெற்ற 16வது போட்டியின்போது பிசிசிஐ ஐபிஎல் பிஎம்ஓஏ நெறிமுறைகளை மீறியதற்காக ரூ,1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீறல் அணி டக்அவுட்டில் மொபைல் போன் பயன்பாடு தொடர்பானது, இது பிசிசிஐ, ஐபிஎல், பிஎம்ஓஏ நெறிமுறைகளின் பிரிவு 4.1.1 ஐ மீறுகிறது. பிந்தர், குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டார்." என்று கூறியது.

