2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய் இன்றைய தினம் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.
சென்னை களத்தில் தவெக
அக்கட்சியில் விஜய் (TVK Vijay) தொடங்கி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna), ராஜ்மோகன் என முன்னணி முகங்கள் சென்னையில் உள்ள தொகுதிகளில் தான் போட்டியிடுகின்றனர். இதையடுத்து சென்னையில் தீவிர கவனத்தை தவெக செலுத்தி வருகிறது. ஏற்கனவே விஜய் பெரம்பூர் மற்றும் கொள்ளத்தூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அன்றைய தினம் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி அவர் தனது உரையை குறுகிய நேரத்தில் முடித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததால் சில இடங்களில் திட்டமிட்டிருந்த பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டன.
அத்துடன், அதிக மக்கள் கூடுகையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் காவல்துறை புகார் தெரிவித்தது. மேலும், விதிமுறைகளை மீறி பிரச்சாரம் நடத்தியதாக விஜயின் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
: தேர்தல் 2026: உங்கள் வேட்பாளர்களின் விவரங்களை ஈசியாக ஆன்லைனில் பார்க்கலம்.. முழு விவரம் இங்கே
இந்த நிலையில், இன்றைய தினம் சென்னை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதை பரிசீலித்த காவல்துறை வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 முதல் 1 மணிக்குள், தி நகர் பகுதியில் பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நேரம் போதுமானதாக இருக்காது எனக் கூறி தவெக பிரச்சாரத்தை ரத்து செய்தது.
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இந்த விவகாரம் குறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விஜய் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற நோக்கில் சில காவல் அதிகாரிகள் செயல்படுகின்றனர், விஜய் பரப்புரை அனுமதி மறுத்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் உள்ளார்.
சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டால் தான் தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடக்கும். தி நகரில் எங்கள் தலைவர் 2 முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய முதலில் அனுமதி வழங்கினர். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே 1 மணி நேரம் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று மாற்றி கூறுகின்றனர்.
: தமிழ்நாட்டின் DNA-வை சிதைக்க துடிக்கும் NDA.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
சென்னையில் விஜய் பிரச்சாரமே செய்ய முடியாத அளவிற்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது. காவல்துறையினர் ஒரு சார்பாகவே செயல்படுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சென்னை கமிஷனர் கரூர் மாதிரி பிரச்சனையை சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறார். இது தொடர்பாக டெல்லியிலும் போய் முறையிட இருக்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே விஜய் வரும் ஏப்ரல் 8ம் தேதி அன்று நெல்லையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

