Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK Vijay And Congress: விஜய் முதல்வராக தவெகவுக்கு ஆதரவு தருமான காங்கிரஸ்.. ராகுல் என்ன முடிவெடுக்க போகிறார்?

TVK Vijay And Congress: விஜய் முதல்வராக தவெகவுக்கு ஆதரவு தருமான காங்கிரஸ்.. ராகுல் என்ன முடிவெடுக்க போகிறார்?

மிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் முறை தேர்தல் களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வந்த திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி தவெக 110 தொகுதிகள் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 45 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல, பல இன்னாள், முன்னாள் அமைச்சர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.

மாற்று கட்சி தலைவர்கள் வாழ்த்து

பெரும்பான்மைக்கு 117க்கும் மேற்பட்ட இடங்கள் தேவை என்ற நிலையில், அதை தவெகவே எடுக்குமா அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்தும் வாழ்த்தும் மற்றும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், "தமிழ்நாடு அரசியலில் பிரம்மாண்டமான அறிமுகத்தை பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள்" என்றுள்ளார்.

அதேபோல, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், "தனது முதல் சட்டமன்ற தேர்தலிலேயே தமிழக மக்கள் விரும்பிய அந்த மாற்றத்தை கொடுத்த அன்பு இளவல் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றிப் பயணம் தொடரட்டும்" என்றுள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தனது முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள விஜய்க்கு வாழ்த்து என்று வாழ்த்தியுள்ளார். சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் மாற்றம் என்று கூறி களம் காணும் விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பியதாக தகவல்கள் வெளிவந்தன. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் கூட காங்கிரஸ் கடும் கறார் மற்றும் இழுபறியை காட்டியது.

: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய விஜயின் தவெக.. யார் இந்த வி.எஸ். பாபு?

காங்கிரஸ் முடிவு என்ன

இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க, இந்தமுறை தவெகவுக்கு தனிப்பெரும்பாண்மைக்கான எண்ணிக்கை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தங்கள் எம்எல்ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்க வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில், தவெகவின் இந்த அமோக வெற்றி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் தான் தவெகவுக்கு இத்தகைய கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது. நான் எனது ரிப்போட்டை கட்சி மேலிடத்திற்கு வழங்கவுள்ளேன்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு ரிப்போட்டை அனுப்பவுள்ளோம். அவர் அனைவரும் இணைந்து கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பார்கள்." என்றார்.

: "மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று" - ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், "தமிழ்நாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் விஜயின் வெற்றி நிச்சயம் பாராட்டுக்குரியது" எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அக்கட்சியின் மேலிடம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாடு அரசியல் களம் உற்றுநோக்கி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi