Will Vijay Form Govt :2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு அரசியலையே மடை மாற்றி இருக்கிறது.
இந்தத் தேர்தலில், எப்போதும் போல அதிமுக vs திமுக என அல்லாமல் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மும்முனை போட்டியை ஏற்படுத்தியது.
வரலாற்றை மாற்றிய தேர்தல் முடிவு
1967ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. பல ஆண்டு காலமாக திமுகவில் பயணித்து வந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி உடனான சச்சரவு காரணமாக, திமுகவில் இருந்து விலகி 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற பேரியக்கத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 1977 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் தொடர்ந்து 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தார். எம்ஜிஆர், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என்ற இருதுருவ அரசியலே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
ஆனால் இவையெல்லாம் 2026 வரை தான் என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நிரூபித்து தமிழக அரசியலின் போக்கையே மாற்றி அமைத்திருக்கிறார். விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை தமிழகம் கண்டுள்ளது. யாராலும் கணிக்க முடியாத சக்தியாக விளங்கிய விஜய் 35 சதவீத வாக்குகளை பதிவு செய்து 108 தொகுதிகளை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார்.
'கிங் மேக்கர்' செங்கோட்டையன்.. அதிமுக டூ தவெக.. வெற்றி வரலாற்றின் பின்னணி!
எம்.ஜி.ஆரின் சாதனையையே..
1967 க்கு பிறகு திமுக அல்லது அதிமுக என்ற 2 கட்சிகள் இல்லாமல் 3வது ஒரு கட்சி தனி பெரும்பான்மை பெற்றது இந்த தேர்தலில் தான் . மேலும் அதிக வாக்கு சதவீதத்தை பெற்று எம்ஜிஆரின் சாதனையையே முறியடித்திருக்கிறார் விஜய் (TVK Vijay).
எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விஜய் பெற முடியாதது தமிழக அரசியலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் ஆட்சி அமைக்க மேலும் 11 இடங்கள் தேவை என்ற நிலையில் 5 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக தனது ஆதரவை அளித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனது நீண்ட கால திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஏற்கனவே தோல்வி விரக்தியில் இருக்கும் திமுகவிற்கு இது மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
அதிமுகவில் பிரளயம்?
இதற்கிடையே விஜயின் வெற்றி அதிமுகவிற்குள்ளும் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. 47 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆளும் கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர முடியாமல் போயிருக்கும் அதிமுகவிற்கு இந்தத் தேர்தல் முடிவு இக்கட்டான ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே சி.வி.சண்முகம் - எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எதிர் குரல்களை எழுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இது தொடர்பாக சி.வி சண்முகத்தின் வீட்டில் இருவரும் கலந்து ஆலோசனை நடத்திய நிலையில் நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட தனது ஆதரவு எம்எல்ஏக்களை சிவி சண்முகம் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
புதுச்சேரி சொகுசு விடுதியில் 27 அதிமுக எம்எல்ஏக்கள்...! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
தனிப்பெரும் கட்சியாக வந்த போதிலும் தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதுவரை ஆளுநரும் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் உள்ளார். விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவுடன் சேர்ந்து தற்போது 112 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவை விஜய் எதிர்நோக்கி இருக்கிறார். ஆனால் அந்த கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
கைகோர்க்கும் திமுக - அதிமுக?
இதற்கிடையே 47 இடங்களைப் பெற்ற அதிமுகவுக்கு வெளியில் இருந்த ஆதரவு அளிக்க திமுக முன் வந்துள்ளதாகவும், அதற்காக இரு கட்சிகளும் இடையே ரகசிய பேச்சு நடப்பதாகவும் நேற்று மாலை முதல் வெளியாகி இருக்கும் தகவல்கள் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. பரம எதிரிகளாக திகழும் இரு கட்சிகளும் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்கும் நோக்கில் இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த தகவலை இதுவரை இரு தரப்பும் உறுதிப்படுத்தவில்லை.
திருமாவளவன் முதல்வர்?
இதனிடையே தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய்க்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என அக்கட்சியின் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் முடிவுகளால் தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடந்து வரும் திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

