டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு:
இந்த அதிர்வு இரவு சுமார் 9.50 மணியளவில் பதிவாகியது. நோய்டா, சந்தீகார், பஞ்சாபின் லூதியானா, ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச், ஸ்ரீநகர், உதம்பூர், டேராடூன் உள்ளிட்ட பல நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. உயரமான குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சில விநாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவித்தனர். வீட்டுப் பொருட்களும் அசைந்ததாகவும் கூறினர்.
சந்தீகாரில் இரண்டாவது மாடி குடியிருப்பில் வசிக்கும் பால்தேவ் சந்த் கூறுகையில், 'சில விநாடிகள் நீடித்த பலமான அதிர்வை நான் உணர்ந்தேன்' என தெரிவித்தார்.
இதுவரை சேதம் அல்லது உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் மையப்பகுதி (epicentre) குறித்த முழுமையான தகவலும் இன்னும் உறுதியாகவில்லை.
பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'X' தளத்தில் வைஷாலி பொத்தார் என்ற பயனர், 'காஷ்மீரில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தேன்; இதுவரை இவ்வளவு பலமான அதிர்வை நான் உணரவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பயனர், 'அதிர்வு மிகவும் அதிகமாக இருந்ததால் வீடுகளில் உள்ள விசிறிகள் மற்றும் படுக்கைகள் கூட குலுங்கின' என தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி-என்சிஆர் பகுதியில் எதிர்பாராத மழையுடன் சேர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் இரட்டை தாக்கம் ஏற்பட்டதாக சிலர் குறிப்பிட்டனர்.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் உணரப்பட்டன. குறிப்பாக இஸ்லாமாபாத், பஞ்சாப் மாகாணம், கைபர் பக்துன்க்வா, பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

