Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு

TV9 Tamil 3 weeks ago
சென்னை, ஆகஸ்ட் 24:தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், பேரவைக் களத்தையே அதிரவைக்கும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தவெக தலைமையிலான அரசு ஏற்கனவே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தாய்மாமன் தங்கமோதிர திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் அண்ணனின் சீர் திட்டம் போன்ற பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொடர் மக்கள் நல நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பெண்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் மிக முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் அதிரடி அறிவிப்பை முதல்வர் பேரவையில் முன்மொழிந்துள்ளார்.

சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அவதி:

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாகத் சர்வதேச அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வருவாயில் பெரும் பகுதியை எரிபொருளுக்காகச் செலவிட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அரசின் நிதி நெருக்கடியான சூழலையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களின் சுமையைக் குறைக்கவும், தவெக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே ஏற்று மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்:

இந்த முக்கிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வழக்கம்போல் சிலிண்டர்களைப் பதிவு செய்து பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் சிலிண்டருக்கான தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிச் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள ஏழை எளிய குடும்பங்கள், சிறு-குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் எனச் சமூகத்தில் பின்தங்கிய சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 4 குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பலன் பெறுவார்கள்.

பொங்கல பண்டிகை முதல் அமல்:

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் முடுக்கப்பட்டு விட்டதாகவும், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2027 ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்திற்காக அரசு கருவூலத்திலிருந்து ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பேரவைத் தலைவர் வாயிலாக அவர் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழகப் பெண்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil