சென்னை, ஜனவரி 23, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, ஜனவரி 23, 2026 தேதியான இன்று அதிமுக-பாஜக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதேபோல், இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று நடைபெறும் கூட்டத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி:
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தேர்தல் பணிகள் முழுவீச்சில் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக, பாஜகவுடன் இணைந்து சந்திக்க உள்ளது. தற்போதைய அதிமுக-பாஜக கூட்டணியில் ராமதாஸ் தரப்பின் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.
இந்த சூழலில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக தேமுதிகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 இடங்களை கேட்கும் பாஜக:
இந்த நிலையில், கடந்த முறை அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த முறை அதனை இரட்டிப்பாக்கி கூடுதல் தொகுதிகளை பாஜக கோரியுள்ளது. அதாவது, அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அதிமுகவுடன் இணையும் சூழலில், ஜனவரி 23, 2026 தேதியான இன்று மதுராந்தகத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் பாஜக-அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமமுக - பாமகவிற்கு ஒதுக்கப்படும் இடங்கள்:
பாஜக கேட்கும் 50 தொகுதிகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாமகவுக்கு 19 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 9 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

