Dailyhunt
"பனையூர் வாசலில் நிற்கப் போகிறீர்களா?".. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் காட்டம்..

"பனையூர் வாசலில் நிற்கப் போகிறீர்களா?".. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் காட்டம்..

TV9 Tamil 1 week ago
Tamilnadu Polls 2026:தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 17 நாட்களே இருப்பதால், தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத உச்சக்கட்ட பரபரப்பை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தலைநகர் சென்னையில் முக்கியத் தொகுதியாகப் பார்க்கப்படும் பெரம்பூரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளுங்கட்சியான திமுக குறித்தும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திரைமறைவு நாயகர்கள் தேவையா?

அந்தவகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்துப் பேசிய அன்புமணி, வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார். "உங்களால் எளிதில் சந்திக்க முடியாத, குறைகளைக் கூற முடியாத ஒரு மக்கள் பிரதிநிதி உங்களுக்குத் தேவையா? தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் கோரிக்கைகளைச் சொல்ல பனையூரில் உள்ள வீட்டு வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் திலகபாமா போன்ற களப் போராளிகளைத் தேர்ந்தெடுத்தால், அவர் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து குறைகளைக் கேட்பார்" என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார். பெரம்பூர் என்பது சாமானிய மக்கள் வாழும் பகுதி. இங்கு மேடையில் நின்றபடி கைகாட்டிவிட்டுச் செல்லும் சினிமா நாயகர்களை விட, மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்பவர்களே தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

விளம்பர அரசு.. திமுக மீது கடும் தாக்கு:

திமுக அரசின் ஐந்தாண்டு கால நிர்வாகத்தைச் கடுமையாகச் சாடிய அன்புமணி, சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். ஒரு நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்துப் போகிறது. மக்கள் பாதுகாப்பிற்காகப் படகுகளை வாங்கி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுகவிடம் தொலைநோக்குப் பார்வையும் இல்லை, முறையான நிர்வாகத் திறமையும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பரப் படங்களில் மட்டுமே மின்னுகிறார், இது வெறும் ஏமாற்று வேலை என்று குற்றஞ்சாட்டினார். மேலும், திமுகவிற்குத் தனித்து நிற்கும் தைரியம் இல்லை என்றும், 30 கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு கூட்டணி பலத்தில் மட்டுமே அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார்.

வியாபாரிகள் Vs உழைப்பாளர்கள்:

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே உண்மையான உழைப்பவர்களின் கூட்டணி என்று குறிப்பிட்ட அவர், திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே என்று தெரிவித்தார். சாதாரண உழைக்கும் வர்க்கத்தினர் தங்கள் பக்கம் இருப்பதாகவும், தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் தங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil