மார்ச் 30, 2026: குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களின் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தைக் கடந்தும் இந்த போர் நீடித்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஆயிரம் அமெரிக்க டாலரை கடந்தும் விற்பனை செய்யப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதலை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தரைவழி தாக்குதலுக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில், குவைத் நாட்டில் உள்ள மின் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிப்பொருள் முதல் உரங்கள் வரை.. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு:
இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பவர் உயிரிழந்துள்ளார். சந்தன செல்வம் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சந்தன செல்வத்தின் உடலை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஈரான் தொடர்பான போரில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை எட்டு ஆக அதிகரித்துள்ளது.

