இந்தியாவில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு மிகவும் பிரபலமான ஒரு வழியாக உருவெடுத்துள்ளது.
நீண்ட காலத்திற்குச் செலவைப் பிரித்துச் செலுத்துவதன் மூலம், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை இம்முறை எளிதாக்குகிறது. தற்போது, பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், ஷாப்பிங் மற்றும் பிற பொருட்களுக்கு வட்டியற்ற அல்லது குறைந்த வட்டி கொண்ட இஎம்ஐ திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், கிரெடிட் கார்டு இஎம்ஐ திட்டங்கள் பார்ப்பதற்கு நல்ல திட்டமாக தோன்றினாலும், உண்மையில் அது பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கலாம். இதில் பெரும்பாலும் செயலாக்கக் கட்டணம், வட்டி மற்றும் பிற வரிகள் போன்ற மறைமுகக் கட்டணங்கள் அடங்கியிருக்கும்.
மிக முக்கியமாக, இஎம்ஐ திட்டங்களை அடிக்கடி பயன்படுத்துவது மக்கள் தங்கள் வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யத் தூண்டலாம், இதனால் ஒட்டுமொத்தக் கடன் சுமை அதிகரிக்கிறது.
கிரெடிட் கார்டு இஎம்ஐகளின் மறைமுகக் கட்டணங்கள்
- ஒரு பொருளை இஎம்ஐ முறையில் வாங்கும்போது, நிலுவைத் தொகையின் மீது வங்கிகள் பொதுவாக வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி உங்கள் மொத்தக் கட்டணச் சுமையை அதிகரிக்கிறது.
- நோ காஸ்ட் இஎம்ஐகளில் கூடுதல் செலவு ஏதுமில்லை என்று பல நுகர்வோர் கருதுகின்றனர். ஆனால், பல சந்தர்ப்பங்களில், வட்டித் தொகையானது பொருளின் விலையிலேயே சேர்க்கப்பட்டிருக்கும்.
இதனால், நுகர்வோர் மறைமுகமாக வட்டி செலுத்துகிறார்கள். - ஒரு பொருளை இஎம்ஐ முறையில் வாங்கும்போது வங்கிகள் பெரும்பாலும் செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கின்றன. இக்கட்டணங்களுக்குக் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகள் இருக்கலாம். இது நம் செலவை மேலும் அதிகரிக்கின்றன.
- இஎம்ஐ முடியும் முன்பே நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்த விரும்பினால், வங்கிகள் முன்கூட்டியே முடிப்பதற்கான கட்டணத்தை விதிக்கலாம். இது பொதுவாக மீதமுள்ள அசல் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும்.
- தற்போதைய வரி விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டு இஎம்ஐகளுடன் தொடர்புடைய வட்டி, செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் முன்கூட்டியே முடிப்பதற்கான கட்டணங்கள் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி பொருந்தும். இது கடனின் மொத்தச் செலவை மேலும் அதிகரிக்கிறது.

