சென்னை, ஆகஸ்ட் 23 : முதல்வர் விஜய் தங்களை நேரில் சந்திக்க வே்ண்டும் என பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
இந்த நிலையில் ஆகஸ்ட் 23, 2026 இன்று தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சிலர் அங்கு மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கின்றனர். மேலும் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்களில் தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவிக நகர், ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என்பதும், மாநகராட்சியின் ஊழியர்களாகவே தொடர்ந்து அவர்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான் தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்எல்ஏ உதவியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தரணும் என நினைக்கும் முதலமைச்சரால் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் ஏன் தர முடியாது? எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறேன் எனச் சொன்னதைக் கேட்டு கரிசனப்பட்டு கார் தருகிறார்கள். சாதாரண மக்களுக்கு சம்பளம் கொடுக்க என்ன பிரச்னை?
என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வேண்டும். அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட உணவுப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெற்றுக்கொள்ள ஓராண்டு விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்டுகிறது. தூய்மை பணியாளர்கலுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த நாள் கூலி ரூ. 832 உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆதரவு தெரிவித்து இடதுசாரி தலைவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்ட படிவத்தை பெற்றுக் கொள்ள துறை அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் எங்களை சந்திக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

