Dailyhunt
சென்னை: எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி செய்து சாப்பிட்ட 3 இளம்பெண்கள்

சென்னை: எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி செய்து சாப்பிட்ட 3 இளம்பெண்கள்

TV9 Tamil 4 days ago
சென்னை விருகம்பாக்கத்தில் கணினி பயிற்சி பெற்று வரும் 7 இளம்பெண்கள் ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கி வருகின்றனர்.
அந்த வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால், சாய்ரா என்ற பெண் தேங்காயில் எலி மருந்து தடவி வைத்துள்ளார். இதனை அறியாத நிகிதா, சவிதா, மதுமிதா ஆகிய 3 தோழிகள் அந்த தேங்காயைச் சட்னி அரைக்கப் பயன்படுத்தியுள்ளனர். நச்சு கலந்த சட்னியைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூவருக்கும் கடுமையான வயிற்று வலியும் மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கே.கே. நகர் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்பில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள விவேகானந்தா தெருவில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு இளம்பெண்கள் தங்கி கணினி பயிற்சி பெற்று வருகின்றனர். விடுமுறை மற்றும் படிப்பு நிமித்தமாக தங்கியிருந்த இவர்களுக்கு, கடந்த சில நாட்களாக வீட்டில் எலிகளின் தொல்லை பெரும் தலைவலியாக இருந்துள்ளது. எலிகளைக் கட்டுப்படுத்த அந்தப் பெண்களில் ஒருவரான சாய்ரா என்பவர், தேங்காய் துண்டுகளில் எலி மருந்தைத் தடவி வீட்டின் மூலைகளில் வைத்துள்ளார்.

அறியாமல் செய்த விபரீத சமையல்

இந்நிலையில், வீட்டில் இருந்த மற்ற இளம்பெண்களான நிகிதா, சவிதா மற்றும் மதுமிதா ஆகிய மூவருக்கும் தேங்காயில் மருந்து தடவப்பட்ட விஷயம் தெரியவில்லை போலும். சமையல் செய்ய முற்பட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டுகளைச் சாதாரணமாகக் கருதி, அதனை எடுத்து சட்னி அரைத்துள்ளனர். அந்த நச்சு கலந்த சட்னியை உணவோடு சேர்த்து அவர்கள் மூவரும் சாப்பிட்டுள்ளனர். உணவு உட்கொண்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்குக் கடுமையான வயிற்று வலியும், தலைச்சுற்றலும் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் உடல்நிலை மோசமடைந்து மூவரும் மயக்கமடைந்தனர். : சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான சாத்தனூர்… எங்கே இருக்கிறது?

மருத்துவமனை அனுமதி மற்றும் தீவிர சிகிச்சை

இவர்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற தோழிகள், உடனடியாக அவர்களை மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், விஷத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்பட்டனர். தற்போது அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கவனக்குறைவாகச் செயல்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil