ஜூன் 4, 2026: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து 40 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.2°C, திருத்தணியில் 39.2°C, பரங்கிப்பேட்டையில் 38°C, மதுரையில் 38.8°C, கடலூரில் 39.1°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொளுத்தும் வெயில்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஜூன் 4ஆம் தேதியான இன்று குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் செவிலியர் மாணவியின் மரணத்துக்கு தரமற்ற மருந்தே காரணம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தொடரும் கனமழை:
ஜூன் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நெல்லை, குமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூன் 8ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

