Dailyhunt
Tamil Nadu Exit Polls : Exit Polls துல்லியமாக இருக்குமா? 2021 தேர்தல் அனுபவம் தந்தது என்ன?

Tamil Nadu Exit Polls : Exit Polls துல்லியமாக இருக்குமா? 2021 தேர்தல் அனுபவம் தந்தது என்ன?

TV9 Tamil 2 weeks ago
Tamilnadu Exit poll 2026: இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் திருவிழா இன்றுடன் ஒரு முடிவுக்கு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்போடு தொடங்கிய இந்த ஜனநாயகப் பயணம், சுமார் ஒன்றரை மாத கால விறுவிறுப்பிற்குப் பிறகு இன்று மாலை நிறைவடைகிறது. இந்த முறை நடைபெற்ற தேர்தலில் பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் மிக ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இது தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

5 மாநில தேர்தல்:

கடந்த மாதம் 9-ம் தேதியன்று அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அவ்வாறு, அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு 85.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் களம் கண்டனர். இங்குப் பதிவான வாக்குகளின் சதவீதம் 78.27% ஆகும். புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிகப்படியாக 91.23% வாக்குகள் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகப்பட்சமாக இந்த முறை 85.10% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு:

மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அங்குள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து 93.19% வாக்குகள் பதிவானது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் வெளியான நிலையில், மக்கள் இப்போது பிந்தைய கணிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

எக்ஸிட் போல் என்றால் என்ன?

பொதுவாக ஒரு மாநிலத்தில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்ததும், அடுத்த அரை மணி நேரத்தில் (6.30 மணிக்கு) பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒரே சமயத்தில் நடப்பதால், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகே கணிப்புகளை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தின் இறுதி கட்டத் தேர்தல் முடியும் நேரமான இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவுகள் வெளியாகும். வாக்களித்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்டு எடுக்கப்படும் இந்த 'எக்ஸிட் போல்' ஆய்வுகள், தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் கணிப்புகளை விட மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு:

வாக்காளர்களின் மனநிலை, தொகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதிகரித்த வாக்கு சதவீதம் ஆகியவை எந்தக் கட்சிக்குச் சாதகமாக அமையும் என்பதை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் ஓரளவுக்குப் பிரதிபலிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் நிலவிய கடும் போட்டி காரணமாக, இன்றைய கருத்துக்கணிப்பு முடிவுகளைக் காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சரியான திசையைக் காட்டினாலும், துல்லியமான இடங்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் இருந்தன. 2021-ல் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் (Times Now-CVoter உட்பட) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA) எளிதாகப் பெரும்பான்மை பெறும் என்று கணித்தன.

2021 கணிப்பு vs உண்மை:

திமுக கூட்டணிக்கு 177 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 49 இடங்களாகக் குறையும் என்றும் கணித்தது. ஆனால், உண்மையான முடிவு  திமுக கூட்டணி 159 இடங்களை வென்றது (திமுக மட்டும் 133 இடங்கள்). அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது. கணிப்புகள் சொன்னது போலவே திமுக ஆட்சிக்கு வந்தாலும், அதிமுக எதிர்பார்த்ததை விடக் கூடுதல் இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil