திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும், காலை முதலே தவெக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.23ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, 8.30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது.
சென்னையில் முன்னிலை நிலவரம்:
அதன்படி, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட திருவல்லிக்கேணி தொகுதி உட்பட முக்கிய அமைச்சர்கள் பலர் போட்டியிட்ட தொகுதிகளில் திமுக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. சென்னை முழுவதையும் தவெக வசமாகும் அளவுக்கு தவெக முன்னிலை வகித்து வருகிறது.சென்னையில் கடந்த கால தேர்தல் நிலவரம்:
சென்னை மற்றும் புறநகரில் உள்ள சட்டமன்ற தொகுதிகள், திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கடந்த 2016ல் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போதே, சென்னையின் 16 தொகுதிகளில் 10ல் திமுக, தன் வசப்படுத்தியது. அடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 16 தொகுதிகளையும், திமுக கூட்டணியுடன் கைப்பற்றி, சென்னை தங்கள் கோட்டை என்பதை நிரூபித்து, ஆட்சியை பிடித்தது. அப்போது, கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 70,384; சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி 69,335; பெரம்பூரில் 54,976 ஓட்டுகள் வித்தியாசத்தில் சேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். சில தொகுதிகளில் வழக்கமான ஓட்டு வித்தியாசத்திலேயே, திமுக வேட்பாளர்கள் பிடித்தனர்.சென்னையில் வாக்கு சதவீதம் உயர்வு:
இந்த தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் வாக்கு சதவீதம் 83.68 சதவீதமாக உயர்ந்தது. வழக்கமாக சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் 60 சதவீதம் என்ற அளவிலே இருக்கும். ஆனால், இம்முறை 11.72 லட்சம் ஆண்கள், 12.48 லட்சம் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 489 பேர் என வாக்களித்து, எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். குறிப்பாக, 7 தொகுதிகளில் 85 சதவீதத்திற்கு வாக்குப்பதிவாகி உள்ளது.
