Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக முதல்வர் லண்டனுக்கு பதிலாக மதுரை, கோவை போகலாம் - அண்ணாமலை அட்வைஸ்!

தமிழக முதல்வர் லண்டனுக்கு பதிலாக மதுரை, கோவை போகலாம் - அண்ணாமலை அட்வைஸ்!

TV9 Tamil 3 hrs ago
சென்னை, செப்டம்பர் 20 : மதுரையில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிகழ்ச்சி செப்டம்பர் 20, 2026 இன்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை, லண்டனில் பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால், முதல்வர் விஜய் லண்டன் சென்று முதலீடு திரட்டுவது தேவையற்றது. இந்தியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கலாம் என விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு அண்ணாமலை அட்வைஸ்

நிகழ்வில் பேசிய அவர், மதுரை வைகை ஆற்றில் ஆக. 3-ல் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம் உட்பட 33 ஏக்கர் பகுதியை சுத்தம் செய்துள்ளோம்.

இப்பணியில் 163 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளின் மனித கழிவுகள் கலக்கின்றன. முதல்வர் விஜய் லண்டனுக்கு சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் லண்டனில் அந்த நாட்டு பொருளாதாரமே வீழ்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது.

அவர்கள் எப்படி நம் நாட்டில் முதலீடு செய்யப்போகிறார்கள்? இது அரசியலுக்காக செய்யப்படும் தேவையற்ற செயல் என்றார். தவெகவின் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகரிக்க குரல் கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால் அந்த கட்சியின் சோழவந்தான் எம்எல்ஏ சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிப்பதாக பேசியுள்ளார்.

அந்த நேரத்தில் பேரவையில் இருந்த தமிழக முதல்வர் அப்போதே தவெக எம்எல்ஏ பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்க வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவர்களாக தவெகவினர் உள்ளனர். நாட்டு மாடுகளை வளர்க்க ஜல்லிக்கட்டு மிகவும் மிக முக்கியம். ஜல்லிக்கட்டு நீண்ட வரலாறு கொண்டது.

அது பற்றி சட்டமன்றத்தில் தவறாக பேசாதீர்கள். இதுபோன்ற பேச்சுகள் மதுரை மக்களை காயப்படுத்தும். மேலும் பேசிய அவர், வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதை விட உள்நாட்டு தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இந்திய தொழிலதிபர்களிடம் பேசினால் தேவையற்ற முதலீடுகளை ஈர்க்க முடியும்.

முதல்வர் விஜய் எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் சென்றார். அதனை தவிர்த்து இண்டிகோ விமானத்தில் மதுரை, கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு செல்ல வேண்டும். உள்நாட்டின் தொழிலதிபர்களுக்கு சரியான சலுகைகள் வழங்கினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் தானாகவே உயரும் என்றார். வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருப்பதை விட, இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், டாடா, அதானி போன்ற பெரும் நிறுவனங்களோ அல்லது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை போன்ற நகரங்களில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்முனைவோர்களோ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எளிதாகப் பங்களிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil