சென்னை, மே 10 : தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் வந்தே மாதரம் முதன்மையாக பாடப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், புதிய அரசு பதவி ஏற்பு விழா, ஆளுநர் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் வந்தேமாதரம் முதன்மைப் படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது. தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக ஆதரவு தலைவர்கள் கண்டனம்
அவரைத் தொடர்ந்து விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது பதிவில், முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் 3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது ஏற்புடையதல்ல. அரசு நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.திருமாவளவன் எக்ஸ் பதிவு
விஜய்க்கு ஆதரவளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இதுவரை இருந்த மரபுக்கு மாறாக, முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பதவியேற்பு விழாவை சுட்டிக்காட்டி விமர்சனம் எழுந்த பிறகும், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் அதே போல தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தனது அறிக்கையில், முதல்வர் விஜய் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்து இந்தத் தவறு தொடர்வதை, தவெக அனுமதிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். தவெக ஆதரவு தலைவர்கள் அனைவரும் தமிழ்த் தாய் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

