தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையுடன் ஆதரவு தருவதாக முதல் கட்சியாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் முனைப்பு காட்டி வந்த காங்கிரஸ், தற்போது தொங்கு சட்டமன்றம் அமைந்த நிலையில், நிபந்தனையுடன் ஆதரவை வழங்கியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய வரவாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அதோடு, முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடிக்க உள்ளது. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. இதையொட்டி, தனது கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை விஜய், மற்ற கட்சிகளிடம் கேட்டு வருகிறார். இந்நிலையில், இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மக்கள் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது:
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், தமிழகத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு கோரி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விடுத்த அதிகாரப்பூர்வ வேண்டுகோளை இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசிற்காக ஒரு தெளிவான மற்றும் மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளனர். விஜய் தலைமையிலான தவெக அடுத்த ஆட்சியை அமைக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதை காங்கிரஸ் மதிக்கிறது.
காங்கிரஸ் வைத்த முக்கிய நிபந்தனை:
மக்களின் இந்த விருப்பத்திற்கு இணங்க, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவிற்கு முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்துள்ளது. அதோடு, இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், தந்தை பெரியாரின் சமூக நீதி லட்சியங்கள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு நெறிகளை நிலைநாட்டவும் பாடுபடும்.எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும்:
இந்தக் கூட்டணி தற்போதைய ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும். விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இணைந்து, தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்போவதாக இந்த அறிக்கையில் உறுதி அளித்துள்ளனர்.

