Tamilnadu Polls 2026:திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கத் திட்டமிட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருமாவளவன் தேர்தலில் போட்டியிடவில்லை:
எனது கட்சி நிர்வாகிகளிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாறும். அப்போது, நான் சட்டமன்றத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே தெரிவித்திருந்தேன். தமிழகம் குறி வைக்கப்பட்ட மாநிலமாக மாறி உள்ளது என்று கூறி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருமாவளவனின் முடிவு குறித்து புதுச்சேரியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திமுக இந்த முறை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வராது என்பதைத் திருமாவளவன் முன்கூட்டியே கணித்துள்ளார் என்று கூறினார்.துணை முதல்வர் பதவி கேட்க திட்டம்:
மேலும், அதன் காரணமாகவே அவர் சட்டமன்றத்திற்குச் சென்று, திமுகவிற்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், துணை முதலமைச்சர் பதவியைக் கோரத் திட்டமிட்டதாகவும் தெரிவித்த அவர், இந்த முறை அரசியல் சூழல் மாறும் என திருமாவளவன் வெளிப்படையாகவே கூறுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்று கேள்வி எழுப்பினார். அதோடு, இதன் காரணமாகவே திமுக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.விஜய் எத்தனை முறை புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்?
புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் விஜய், பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியை "சோர்ந்து போன கூட்டணி" என்று விமர்சித்திருந்தார். இதற்கு நேரடியாகப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, விஜய்யின் அரசியல் புரிதலைக் கேள்விக்குள்ளாக்கினார். "விஜய் அவர்கள் இதுவரை எத்தனை முறை புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்? அவருக்கு உண்மையிலேயே இந்த மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை இருக்கிறதா?" என்று கேட்டார்.தேர்தலுக்கு வருபவர்களுக்கு தேவைகள் தெரியாது:
மேலும், புதுச்சேரியின் முதலமைச்சர் என்.ஆர். சுவாமி அவர்கள் 'வாழும் காமராஜர்' போல ஒவ்வொரு தெருவாகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதையும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜய்யை விட அதிகமுறை புதுச்சேரிக்கு வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். சென்னையில் இருந்துகொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்களுக்குப் புதுச்சேரி மக்களின் உண்மையான தேவைகள் தெரியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
