Dailyhunt
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

TV9 Tamil 2 months ago

வானிலை நிலவரம், பிப்ரவரி 17, 2026: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளின் மேல்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக பிப்ரவரி 16ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் கிழக்குப் பகுதிகளில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்:

இதன் விளைவாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை ஏற்படக்கூடும். குறிப்பாக பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவலாம் என கூறப்பட்டுள்ளது.

 கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..

பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை  எச்சரிக்கை:

பிப்ரவரி 21ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களிலும், குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதிகாலை பனி படிப்படியாக குறையும்:

மழை வாய்ப்பு இருந்தாலும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் லேசாக நீடிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வரக்கூடிய நாட்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். அதாவது சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். இருப்பினும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் தொடரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil