கோயம்புத்தூர் அருகே உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
வெள்ளியங்கிரி மலைப் பயணம் மற்றும் தரிசனம்
கோயம்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த மலையின் ஏழாவது சிகரத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தில், பக்தர்கள் இந்த கரடுமுரடான மலைப்பாதையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிப்பது வழக்கம். தற்சமயம் சீசன் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு வருகை தருகின்றனர்.தர்மபுரி மாணவரின் திடீர் உடல்நலக்குறைவு
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பீடம்னேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதான முகேஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் கல்லூரி ஒன்றில் டி.பார்ம் ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று இரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையேறத் திட்டமிட்ட முகேஷ்குமார், பூண்டி அடிவாரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு மலையேறத் தொடங்கினார். இன்று அதிகாலை சுமார் 5-வது மலையை எட்டியபோது, அவருக்கு எதிர்பாராத விதமாக கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்…வனத்துறையினரின் மீட்புப் பணியும் மரணமும்
முகேஷ்குமார் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற வன ஊழியர்கள், முகேஷ்குமாரை டோலி கட்டி மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலாந்துறை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் தகுதி மற்றும் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்த பின்னரே பக்தர்கள் மலையேற வேண்டும் என வனத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
