தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க இருக்கிறது. இதில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக-விற்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. இது குறித்து கிடைத்த முக்கியத் தகவல்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
நள்ளிரவில் நடந்த ரகசிய ஆலோசனை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழு, நேற்று நள்ளிரவு காணொளி வாயிலாக ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பி-க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் செல்லக்குமார் உள்ளிட்ட 29 முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தங்களின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு ஒரு மிக முக்கியமான நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது.பாஜக கூட்டணியை தவிர்க்க வேண்டும்:
தவெக தலைவர் விஜய், எக்காரணம் கொண்டும் பாஜக அல்லது அதன் தோழமை கட்சிகளின் ஆதரவைப் பெறக்கூடாது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை மட்டுமே விஜய் பெற வேண்டும். அதாவது திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அல்லது எந்தக் கூட்டணியிலும் இல்லாத நடுநிலையான கட்சிகளின் ஆதரவைப் பெறலாம். தமிழகத்தில் எந்த வகையிலும் மதவாத சக்திகள் அதிகாரத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்பதே காங்கிரஸின் இந்த முடிவுக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது.விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு:
தவெக தலைவர் விஜய் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்து ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையில், நாளை நடைபெறவுள்ள விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள்:
காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாகியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்குச் சில சிறிய கட்சிகளுடன் தவெக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆதரவு முடிவின் மூலம் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதற்கான சூழல் உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
